ஒரு அறிமுகம்:
ஆன்மீக பாதையின் இரண்டு உலகளாவிய உண்மை அம்சங்களை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?
- முழுமையான ஆனந்தமும் நிறைவும் நிறைந்த வாழ்க்கையில் ஒரு இடத்தை அடைவது சாத்தியம் என்று நீங்கள் ஆழமாக உணர்ந்தால், நீங்கள் சரிதான்.
- மேலும் நீங்கள் அங்கு தனியாக செல்ல முடியாது-நம் அனைவருக்கும் பாதையில் ஒரு விவேகமிக்க வழிகாட்டி, நம் கண்ணோட்டத்தை விட அதிக தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு முன்மாதிரி தேவை.
பரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் இந்த வாக்கியத்துடன் தொடங்குகிறது: “அனாதியான மெய்ப்பொருளைத் தேடுவதும், அதனுடன் இணைந்த குரு- சிஷ்ய நல்லுறவும் தொன்று தொட்டே பாரதப் பண்பாட்டின் சிறப்பியல்புகளாக இருந்து வந்துள்ளன.”
பரமஹம்ஸரின் சுயசரிதம், அதன் முதல் வார்த்தைகளிலிருந்தே- முழுவதுமாக, நாம் அனைவரும் தேடும் பேரின்ப விழிப்புணர்வில் முழுமையாக அமிழ்ந்திருக்கும் ஒருவரின் வழிகாட்டுதலால் வரும் உன்னத நன்மையை வெளிப்படுத்துகிறது.
முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்த ஆன்மீக உன்னத இலக்கியமானது நாடுவோருக்கு, ஒரு உண்மையான குரு என்ற பதத்தின் காலத்தால் அழியாத அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகளவில் அறிமுகப்படுத்துகிறது – மேலும் அத்தகைய ஒருவரின் போதனைகளை முழு மனதுடன் பயன்படுத்தும் எவருக்கும் யோகத்தின் வற்றாத அற்புதங்களையும் அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு மார்ச் மாதமும், பரமஹம்ஸர் மற்றும் அவரது அன்பிற்குரிய குரு ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரை போற்றும் விதமாக (இந்த இரண்டு மாபெரும் ஆன்மாக்களின் மகாசமாதி ஆண்டு நிறைவு தினங்களை நினைவு கூரும் வகையில்) நினைவு தின தியானங்கள் நடத்துகிறோம். அந்த சிறப்பு நிகழ்வுகள் தொடர்பாக, ஒரு முக்தியடைந்த ஆசான் மூலம் பரம்பொருள், உலகிற்கு ஒளியைக் கொணர்ந்து வாழ்க்கையை மாற்ற எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த பரமஹம்ஸரின் எழுச்சியூட்டும் உரைகள் கீழே காணலாம்.
பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் படைப்புகளிலிருந்து:
ஓர் உண்மையான குரு, இறைவனை அறிந்தவராவார்…அதனால் மற்றவர்களை அந்தப் பாதையில் அவர்களுடைய சொந்த முக்திக்கும் ஆன்ம ஏற்றத்திற்கும் வழி நடத்திச் செல்லும் வல்லமையுடையவர்.
குரு அகத்தேயுள்ள ஆன்மாவை வெளிப்படுத்தவும், பரம்பொருளில் என்றென்றும் நீடித்திருக்கும் விடுதலைக்கான அதன் மேல்நோக்கிய ஏற்றத்திற்கு வழி காட்டவும் உங்களுக்கு உதவி செய்கிறார்.
ஒரு பாடசாலையில் கிடைக்கக்கூடிய சமய சார்பற்ற அறிவைப் புரிந்துகொள்வதற்கு, அதனை அறிந்திருக்கிற ஓர் ஆசிரியரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே ஆன்மீக உண்மைகளை புரிந்து கொள்வதற்கும், இறைவனை அறிந்திருக்கிற ஒர் ஆன்மீக ஆசிரியர் அல்லது குருவினைப் பெற்றிருப்பது அவசியமானதாகும். அவரது பூத உடலில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர் முன் இல்லாவிடினும், அல்லது பூவுலகில் அவரது பிறவி முடிந்திருந்தாலும் கூட, நீங்கள் இறைவனை அறிய விரும்பினால், அத்தகைய ஓர் ஆசானின் போதனைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
குரு-சிஷ்ய உறவினுடைய தெய்வீக விதிமுறையைப் பற்றிய ஒரு ஞானம் அவசியமானதாகும். நாங்கள் இதனை இந்தியாவில் கற்றுக்கொள்கிறோம். இது மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் முக்கியமானது: முதலில் குருவினை நீங்கள் காண வேண்டும்; பின் உண்மையான ஆன்மீக வளர்ச்சி துவங்குகிறது.
வாழ்க்கை என்னும் பள்ளத்தாக்கின் வழியே குருட்டுத்தனமாக, இருளில் தடுமாறியபடி சென்று கொண்டிருக்கும் பொழுது, கண்களைப் பெற்றுள்ள ஒருவரின் உதவி உங்களுக்குத் தேவை. உங்களுக்கு ஒரு குரு தேவை. இவ்வுலகத்தில் உண்டாக்கப்பட்டிருக்கும் பெருங் குழப்பத்தில் இருந்து வெளியே வரும் ஒரே வழி, உள்ளொளி பெற்ற ஒருவரைப் பின்பற்றி நடத்தல்தான். நான் என் குருவை, என் மீது ஆன்மீக ஆர்வம் கொண்டிருந்தவரும் என்னை வழிநடத்துவதற்கான ஞானம் பெற்றிருந்தவருமான அவரைச் சந்திக்கும் வரை நான் உண்மையான மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் காணவே இல்லை.
நான் உண்மையான குருவினை கண்டறிவதற்காக இந்தியா முழுவதிலும் தேடினேன். புத்தகங்களில் தேடினேன்; கோயில் கோயிலாகவும் ஒரு புனித திருத்தலத்திலிருந்து மற்றொன்றிற்கும் யாத்திரை சென்றேன்; ஆனால் என்னுடைய ஐயங்கள் என்னை எல்லா இடங்களிலும் பின் தொடர்ந்தன. ஆனால் அனுபூதி அடைந்திருந்த எனது குருவை – ஸ்ரீ யுக்தேஸ்வர் – தேடிக்கண்டு, அவருடைய விழிகளில் ஆன்ம தெய்வீகத்தைப் பார்த்த பொழுது என்னுடைய ஐயம் அனைத்தும் பறந்து விட்டது. அவருடைய ஆசிகளினால் என்னுடைய முழு வாழ்வும் மாறிவிட்டது. அதனாலேயே நான் உண்மையான குருவினையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றுவதின் முக்கியத்துவத்தை உங்களிடம் வலியுறுத்துகின்றேன்.
ஓர் உண்மையான குரு மற்றவர்களுடைய இதயங்களில் தான் போற்றப்படுவதை விரும்ப மாட்டார், மாறாக இறை உணர்வு நிலையை அவர்களது உணர்வு நிலையில் விழித்தெழச் செய்ய விரும்புவார்.
இறைவனின் இருப்பை வரவேற்பதற்கு ஏற்ற ஒரு கோவிலாக என்னை மாற்ற ஞானம் எனும் உளியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை என் குரு எனக்குக் காட்டினார். முக்தி அடைந்த ஆசான்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், எல்லா மனிதர்களாலும் இதைச் செய்ய முடியும்.
YSS இணையதளத்தில், ஆன்மீகப் பாதையின் இந்த இன்றியமையாத அம்சத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் ஞானத்தை மேலும் அறிய “ஒருவருடைய ஆன்மீகத் தேடலில் குருவின் பங்கு” என்பதை வாசிக்கலாம். பரமஹம்ஸர், தனது படைப்புகளின் இந்த பகுதிகளில், ஒரு சாதகருக்கும் அவரது குருவுக்கும் இடையே நிலவும் மேன்மைமிக்க மற்றும் மிகவும் தனிப்பட்ட உறவை விளக்குகிறார்.
YSS/SRF இன் தற்போதைய மற்றும் கடந்தகால தலைவர்களின், உண்மையான குருவின் தன்மை மற்றும் அத்தகைய ஒருவருடன் நமது உணர்வுநிலையை எவ்வாறு இசைவித்திருப்பது என்பது பற்றிய பல குறுகிய வீடியோக்களைப் பார்க்க, YSS வலைப்பதிவின் மற்றொரு பக்கத்தைப் பார்வையிட உங்களை அழைக்கிறோம். அத்தகைய ஒருவர் இறை உணர்ந்தவர், மேலும் சாதகரை அவரது ஆன்ம அனுபூதிக்கு வழிநடத்தக்கூடியவர் ஆவார்.