போர், வறுமை, நோய், கவலை மற்றும் இலக்கற்ற வாழ்க்கை ஆகியவற்றால் மனிதகுலம் அழிக்கப்படுகின்ற உலகில், கருணையுள்ள ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே கவலையுடன் சிந்திக்கிறார்கள், “உலகின் பிரச்சினைகளைக் குறைக்க நான் என்ன செய்ய முடியும்?”
பரமஹம்ஸ யோகானந்தர் பதிலளித்தார்:
“ஆன்மீக உணர்வுநிலை மட்டுமே – தன்னிலும் மற்ற அனைத்து உயிரினங்களிலும் இறை இருப்பை உணர்தல் – உலகைக் காப்பாற்ற முடியும். அதை விடுத்து அமைதிக்கான வாய்ப்பை நான் காணவில்லை. உங்களிடமிருந்து தொடங்குங்கள். வீணடிக்க நேரமில்லை. இறைவனுடைய ராஜ்யத்தை இப்பூவுலகில் கொண்டு வர உங்கள் பங்கைச் செய்வது உங்கள் கடமை.
இறைவனின் இருப்பையும் அன்பையும் நாம் அகத்துள் உணரும்போது, அதை வெளியிலும் வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்கிறோம். இது மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கான சாத்தியப்படக் கூடிய தீர்வு, ஏனென்றால் நமது உணர்வுநிலைக்கும் உலகச் சூழல்களுக்கும் இடையே ஒரு ஆற்றல் மிக்க உறவு உள்ளது.
அரசியல், சமூக அல்லது சர்வதேச பிரச்சனைகள் – இந்த நிலைமைகள் லட்சக்கணக்கான மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்கள் மற்றும் செயல்களின் விளைவாகும். உலக நிலைமைகளை மாற்றுவதற்கான நிரந்தர வழி, முதலில் நமது எண்ணங்களை மாற்றி, நம்மை மாற்றிக்கொள்ளவது தான். பரமஹம்ஸ யோகானந்தர் கூறியது போல், “உங்களைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் ஆயிரக்கணக்கானவர்களைச் சீர்படுத்துவீர்கள் .”
அவர் தொடர்ந்து விளக்கமளித்தார்:
“தன் சொந்த தவறான சிந்தனையின் விளைவுகளைத் தவிர்க்க இறைவனிடம் திரும்ப வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தை வரலாற்றில் மனிதன் அடைந்துவிட்டான். நாம் பிரார்த்திக்க வேண்டும், நம்மில் சிலர் மட்டுமே செய்வதென்பது அல்ல. நம் நம்பிக்கை வளர வளர, நாம் எளிமையாகவும், உருக்கமாகவும், உண்மையாகவும், அதிக சக்தியுடனும் பிரார்த்திக்க வேண்டும்.
“பிரார்த்தனை என்பது மனிதனுக்கான இறைவனின் உதவியைக் கோரும், அக்கறையுள்ளவர்களின் அன்பின் ஆற்றல்மிக்க வெளிப்பாடாகும். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் உங்கள் பிரார்த்தனை செயல்பாடுகள் மூலம் உலகத்தை மாற்ற நீங்கள் உதவலாம்.
-டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தின் தியான அறை அர்ப்பணிப்பில்
” பேரழிவையும் பெரும்சேதங்களையும் உண்டாக்கும் இயற்கையில் ஏற்படும் திடீர் கொந்தளிப்புகள், ‘இறைவனின் செயல்கள்’ அல்ல. இத்தகைய பேரழிவுகள் மனிதனின் எண்ணங்கள் மற்றும் செயல்களால் விளைகின்றன. மனிதனின் தவறான சிந்தனை மற்றும் தவறான செயல்களின் விளைவாக ஏற்படும் தீங்கு விளைவிக்கும் அதிர்வுகளின் கூட்டிணைவின் காரணமாக, உலகின் நன்மை தீமையின் அதிர்வு சமநிலை எங்கு சீர்குலைந்தாலும், நீங்கள் அழிவைக் காண்பீர்கள்.
“மனிதனின் உணர்வுநிலையில் பருப்பொருள் சார்பின்மை மேலோங்கும் போது, நுட்பமான எதிர்மறைக் கதிரலைகள் வெளிப்படுகின்றன; அவற்றின் ஒட்டுமொத்த சக்தி இயற்கையின் மின் சமநிலையை சீர்குலைக்கிறது, அப்போதுதான் பூகம்பங்கள், வெள்ளம் மற்றும் பிற பேரழிவுகள் ஏற்படுகின்றன.”
இறைத்-தொடர்பு தனிப்பட்ட மற்றும் சர்வதேச குணப்படுத்துதலைக் கொண்டுவருகிறது
ஆனால், பெருமளவு ஆண்களும் பெண்களும் தியானம் மற்றும் பிரார்த்தனையில் இறைவனிடம் திரும்பினால், தனிநபர்களுக்கு நோய் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மை, நாடுகளுக்கிடையே போர் மற்றும் இயற்கைப் பேரழிவை கொண்டு வரும் சுயநலம், பேராசை, வெறுப்பு ஆகிய எதிர்மறை அதிர்வுகளை வெற்றி பெற முடியும் என்று பரமஹம்ஸர் வலியுறுத்தினார். ஆன்மீக வாழ்க்கை மற்றும் இறைத் தொடர்பு வழியாக நம்மை மாற்றிக் கொள்வதன் மூலம் நாம் தன்னியக்கமாக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அதிர்வுகளை வெளிப்படுத்துகிறோம், இது இணக்கமற்ற வாழ்க்கையின் எதிர்மறை விளைவுகளை வலிமையற்றதாக்க பெருமளவில் செயல்படுகிறது.
“ஆன்மாக்கள் மற்றும் ஒன்றுபட்ட உலகத்திற்காக நம் இதயங்களில் பிரார்த்தனை செய்வோம். இனம், மதம், நிறம், வர்க்கம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் நாம் பிளவுபட்டதாகத் தோன்றினாலும், ஒரே இறைவனின் குழந்தைகள் என்ற முறையில் நாம் ஆன்மாக்களில் சகோதரத்துவத்தையும் உலக ஒற்றுமையையும் உணர முடிகிறது. ஒவ்வொரு தேசமும், மனிதனின் உள்ளொளி பெற்ற உணர்வின் மூலம் இறைவனால் வழிநடத்தப்படுகின்ற, பயனுள்ள ஒரு பகுதியாக இருக்கும் ஒரு ஐக்கிய உலகத்தை உருவாக்க நாம் பாடுபடுவோமாக.
“நம் இதயத்தில் நாம் அனைவரும் வெறுப்பு மற்றும் சுயநலமற்று இருக்கக் கற்றுக்கொள்வோம். நாடுகளிடையே நல்லிணக்கத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். இதனால், நியாயமான புதிய சிறந்த நாகரீகத்தின் வாயில் வழியாக அவை இணைந்து செல்ல முடியும்.
– பரமஹம்ஸ யோகானந்தர்
ஆகவே, இறைவனின் குணமளிக்கும் சக்தியின் ஒரு ஊடகமாக, மற்றவர்களுக்கான பிரார்த்தனை என்பது நாம் வழங்கக்கூடிய மிக உயர்ந்த சேவைகளில் ஒன்றாகும். பொருள்ரீதியான சேவை, சமூக நலப்பணிகள் மற்றும் பிற வகை நிவாரணங்கள் மற்றவர்களின் துன்பத்தைத் தற்காலிகமாகத் தணிப்பதில் மதிப்புமிக்கவை மற்றும் அவசியமானவை, ஆனால் விஞ்ஞானபூர்வ பிரார்த்தனை உலகின் துன்பங்களின் அடிப்படைக் காரணத்தையே தாக்குகிறது:
மனிதகுலத்தின் தவறான சிந்தனை முறைகள். உலகளாவிய பிரார்த்தனை குழுவில், பங்கேற்பதன் மூலம், உலகிற்கும் மற்றும் உதவி தேவைப்படும் நம் அன்பர்களுக்கும் நீடித்த அமைதி மற்றும் குணப்படுத்துதலைக் கொணர நாம் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த முறையில் உதவ முடியும்.