பரமஹம்ஸ யோகானந்தர் 1893 -ம் ஆண்டு ஜனவரி 5 -ம் தேதி இந்தியாவில், கோரக்பூரில் இறைப்பற்று கொண்ட வசதியான வங்காளியர் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய இயற்பெயர் முகுந்தலால் கோஷ். அவரது குழந்தைப்பருவத்திலிருந்தே, அவருடைய விழிப்புணர்வு மற்றும் ஆன்மீக அனுபவத்தின் ஆழம் அசாதாரணமாக இருந்தது என்பது அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.
அவரது பெற்றோர்கள் இருவரும், நவீன இந்தியாவில் கிரியா யோகத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு கருவியாக செயல்பட்ட புகழ்பெற்ற மகான் லாஹிரி மகாசயரின் சீடர்களாக இருந்தனர். யோகானந்தர் தனது தாயிடம் ஒரு கைக்குழந்தையாக இருந்தபோது, லாஹிரி மகாசயர் அவரை ஆசீர்வதித்து முன்னறிவித்தார் “இளந்தாயே, உன் மகன் ஒரு யோகியாவான். ஆன்மீக ஆற்றலால் அவன் அனேக ஆன்மாக்களை இறைவனின் சாம்ராஜ்யத்திற்குக் கொண்டுசெல்வான்.”
அவரது இளமைப் பருவத்தில், தனது ஆன்மீகத் தேடலுக்கு வழிகாட்டக்கூடிய ஞானஒளி பெற்ற குரு ஒருவரைக் கண்டறியும் எதிர்பார்ப்பில், முகுந்தன், இந்திய ஞானிகள் மற்றும் மகான்களில் பலரை நாடிச்சென்றார். 1910 –ம் ஆண்டில்தான் தன் பதினேழாவது வயதில், வணக்கத்திற்குரிய ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி (வலது) அவர்களை சந்தித்து அவரது சீடரானார். யோகத்தில் சிறந்த மகானாகிய இவரது ஆசிரமத்தில், தனது வாழ்க்கையின் அடுத்த பத்து வருடங்களின் சிறந்த பகுதியை, ஸ்ரீ யுக்தேஸ்வரரின், கண்டிப்பான ஆனால் அன்பான ஆன்மீகப் பயிற்சி பெறுவதில் கழித்தார்.
அவர்களது முதல் சந்திப்பிலும், அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களிலும் ஸ்ரீ யுக்தேஸ்வர், இளம் சீடரிடம் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் புராதன விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தைப் பரப்புவதற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
1915 –ம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பிறகு முகுந்தன், இந்தியாவின் வணங்குதற்குரிய துறவறத்தின் ஸ்வாமி பரம்பரையில் ஒரு சன்னியாசியாக முறையான உறுதிமொழி எடுத்துக்கொண்டார், அந்த நேரத்தில் அவர் யோகானந்தர் என்ற பெயரைப் பெற்றார் (யோகத்தின், அதாவது இறைவனுடன் ஐக்கியமாவதன் மூலம் அடையும் ஆனந்தம், பேரானந்தத்தை குறிக்கிறது) இறையன்பு மற்றும் இறைச்சேவைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்ற அவருடைய தீவிர விருப்பம் நிறைவேறியது.