1924 முதல் 1935 வரை, யோகானந்தர் பரவலாகப் பயணம் மேற்கொண்டு, சொற்பொழிவுகள் ஆற்றினார், அமெரிக்காவில் மிகப் பெரிய அரங்குகள் நிறைந்த சபையோருக்கு உரையாற்றினார் – நியூயார்க்கின் கார்னெகி ஹாலில் இருந்து லாஸ் ஏஞ்ஜலீஸ்-ல் ஃபில்ஹார்மோனிக் அரங்கம் வரை. லாஸ் ஏஞ்ஜலீஸ் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது: “சொற்பொழிவு பற்றி விளம்பரப் படுத்தத் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 3000 ஆசனங்களைக் கொண்ட மண்டபம் முழுவதும் நிறைந்தது. அனுமதி கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் …….திருப்பி அனுப்பப்பட்டு ஃபில்ஹார்மோனிக் அரங்கம் (The Philharmonic Auditorium) ஓர் அசாதாரணமான காட்சியை அளித்தது.”
யோகானந்தர் உலகின் பெரிய சமயங்களின் அடிப்படை ஒற்றுமையை வலியுறுத்தினார். மேலும், இறைவனின் நேரடி தனிப்பட்ட அனுபவத்தை அடைய அனைவருக்கும் பொருந்தக்கூடிய வழிமுறைகளை கற்பித்தார். அவரது போதனைகளில் தீவிரமாக இருந்த மாணவர்களுக்கு ஆன்ம-விழிப்புணர்வை ஏற்படுத்தும் உத்திகளாகிய கிரியா யோகத்தை, போதித்தார். மேலை நாடுகளில் தனது முப்பது ஆண்டுகளில் 1,00,000 -க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிரியா யோக தீட்சை அளித்தார்.
அவரது மாணவர்களாக மாறியவர்களில், தோட்டக்கலை நிபுணர் லூதர் பர்பாங்க் உட்பட, விஞ்ஞானம், வணிகம் மற்றும் கலைகளில் பிரபலமானவர்களான ஓபரா பாடகி அமிலிதா கலி-குர்ஸி, ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (கோடக் கேமரா கண்டுபிடிப்பாளர்), கவிஞர் எட்வின் மார்க்கம், இசைக்குழு இயக்குனர் லியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி ஆகியோர் இருந்தனர். 1927-ம் ஆண்டில், அவரது செயல்பாடுகள் குறித்த செய்தித்தாள் அறிக்கைகளில் ஆர்வம் காட்டிய ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜினால் வெள்ளை மாளிகையில், அதிகாரப் பூர்வமாக வரவேற்கப்பட்டார்.
1929-ம் ஆண்டில், மெக்ஸிகோவிற்கு சென்ற இரண்டு மாத பயணத்தின் போது, லத்தீன் அமெரிக்காவில் தனது பணியின் எதிர்கால வளர்ச்சிக்கான விதைகளை விதைத்தார். மெக்ஸிகோவின் ஜனாதிபதி டாக்டர் எமிலியோ போர்டெஸ் கில் அவரை வரவேற்றார். பின்னர், அவர் யோகானந்தரின் போதனைகளுக்கு தனது வாழ்நாள் முழுவதும் அபிமானியாக இருந்தார்.
1930-களின் மத்தியில் பரமஹம்ஸர், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பணிகளை உருவாக்க உதவியாக இருந்து, அவரது வாழ்நாள் முடிந்த பின்னர் கிரியா யோக இறை பணிகளை முன்னோக்கி கொண்டு செல்லப் போகும், சில ஆரம்பகால சீடர்களை சந்தித்தார் — ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைவர்கள் என்று அவரது ஆன்மீக வாரிசுகளாக அவர் நியமித்த இந்த இருவர் உட்பட — 1932-ல் கன்சாஸ் நகரில் குருவை சந்தித்த ராஜரிஷி ஜனகானந்தர் (ஜேம்ஸ் ஜே. லின்); மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு சால்ட் லேக் சிட்டியில் தனது வகுப்புகளில் கலந்து கொண்ட ஸ்ரீ தயா மாதா.
1920-கள் மற்றும் ’30-களில் அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, எஸ் ஆர் எஃப் பணிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க முன்வந்த மற்ற சீடர்கள் டாக்டர் M.W. லூயிஸ் மற்றும் திருமதி M.W. லூயிஸ், 1920-ல் பாஸ்டனில் அவரைச் சந்தித்த வர்கள்; ஞானமாதா (சியாட்ல், 1924); தாரா மாதா (சான் பிரான்சிஸ்கோ, 1924); துர்கா மாதா (டெட்ராய்ட், 1929); ஆனந்த மாதா (சால்ட் லேக் சிட்டி, 1931); ஸ்ரத்தா மாதா (டகோமா, 1933); மற்றும் சைலசுதா மாதா (சாண்டா பார்பரா, 1933).
இவ்வாறு, யோகானந்தரின் மறைவிற்குப் பின்னர் பல ஆண்டுகளாக, இன்று வரையும் தொடர்ந்து, பரமஹம்ஸ யோகானந்தரிடம் தனிப்பட்ட ஆன்மீகப் பயிற்சியைப் பெற்ற சீடர்களால் ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் வழிநடத்தப்படுகிறது.
அவரது சேவையின் ஆரம்பகால வருடங்களில் யோகானந்தரின் உரைகள் மற்றும் வகுப்புகள் அவ்வப்பொழுதுதான் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், ஸ்ரீ தயா மாதா (பின்னர் அவரது உலகளாவிய அமைப்பின் தலைவரானார்) 1931-ல் அவரது ஆசிரமத்தில் சேர்ந்த போது, யோகானந்தரின் நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகள், வகுப்புகள், இயல்பான உரையாடல்கள், ஆகியவற்றை விசுவாசத்துடன் பதிவு செய்யும் புனிதப் பணியை மேற்கொண்டார். இதனால் அவரது ஞானமும் அகத்தூண்டுதலும் அவற்றின் மூல சக்தியுடனும் பரிசுத்தத்துடனும் பாதுகாக்கப்பட்டு, எதிர்கால தலைமுறைகளுக்கு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பினால் வெளியிடப்படமுடியும்.