பிரார்த்தனை வழிபாடு (கால அளவு: 15 - 20 நிமிடங்கள்)
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் சக்தியால் ஆக்கப்பட்டவை என்றும், திடப்பொருள்கள், திரவங்கள், வாயுக்கள், ஒலி, ஒளி ஆகியவற்றுக்கு இடையிலான தோற்றமளிக்கும் வேறுபாடு அவற்றின் அதிர்வுறும் விகிதங்களில் உள்ள ஒரு வேறுபாடு மட்டுமே என்றும் நவீன அறிவியல் காட்டியிருக்கிறது. இதேபோல், உலகின் பெரிய மதங்கள், படைக்கப்பட்டவை அனைத்தும் ஓம் அல்லது ஆமென் — ஆதி வார்த்தை அல்லது பரிசுத்த ஆவியின் பேரண்ட அதிர்வுச் சக்தியில் உருவாகின்றன என்று கூறுகின்றன. “ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, மற்றும் வார்த்தை கடவுளோடு இருந்தது, மற்றும் வார்த்தை கடவுளாகவும் இருந்தது…. எல்லாம் அவரால் உண்டாயின, மற்றும் அவர் இல்லாமல் எதுவும் உண்டாகவில்லை” (யோவான் 1:1, 3).
“ஆமென் எனப்படுபவரும், நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியும், கடவுளுடைய படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே” (திருவெளிப்பாடு 3:14). ஓர் இயங்கும் இயந்திரத்தின் அதிர்வினால் ஒலி உருவாவதைப் போலவே, சர்வ-வியாபக ஓங்கார நாதம் “பேரண்ட இயந்திரம்” இயங்குவதற்கு விசுவாசமாகச் சாட்சியமளிக்கிறது; இது உயிர் அனைத்தையும், படைப்பின் ஒவ்வொரு துகளையும் அதிர்வுறும் சக்தியின் வாயிலாக தாங்குகிறது.
ஒருமுகப்பாடு மற்றும் மன உறுதியின் மூலம் நம்மால் உடலுக்கு பேரண்டச் சக்தி வழங்கப்படுவதை அதிகரிக்க முடியும். அந்தச் சக்தி உடலின் எந்தப் பகுதிக்கும் செலுத்தப்பட முடியும்; அல்லது அது விரல் நுனிகளாகிய கூருணர்வுள்ள உணர்கொம்புகளின் வாயிலாக, தேவைப்படுவோருக்கு — அவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கூட — ஒரு குணமளிக்கும் சக்தியாகப் பாய, விண்வெளியில் மீண்டும் வெளியிடப்பட முடியும். மகத்தான ஓம் அதிர்வலை வாயிலாக, நம்மால் நேரடியாக இறைவனின் எங்கும்-நிறைந்த உணர்வுநிலையுடன் தொடர்பு கொள்ள முடியும் — அங்கு மாயையான கோட்பாடுகளாகிய காலமும் இடமும் இல்லை. இவ்வாறு தேவைப்படும் ஒருவரின் மனமார்ந்த வேண்டுகோளுக்கும் பின்வரும் முறையில் மற்றவர்களுக்காக தியானம் செய்து கொண்டிருப்பவர்களால் அனுப்பப்படும் ஒருமுகப் படுத்தப்பட்ட சக்திக்குமிடையே உடனடி தொடர்பு ஏற்படுகிறது:
(பயிற்சி செய்யும் பொழுது எழுந்து நில்லுங்கள்)
மூடிய கண்களுடன் பின்வருமாறு பிரார்த்தனை செய்யுங்கள்:
- "தெய்வத் தந்தையே, நீ எங்கும் நிறைந்துள்ளாய்; “நீ உன் எல்லாக் குழந்தைகளிலும் உள்ளாய்.; உன் நலம் தரும் இருப்பை அவர்களுடைய உடல்களில் வெளிப்படுத்துவாயாக.” கண்களை மூடியவாறு, உங்கள் கைகளை ஒன்றாகச் சேர்த்து (உள்ளங்கைகளை நோக்கி) பத்து முதல் இருபது விநாடிகள் விரைவாகத் தேய்க்கவும். (இந்த இயக்கமும் அடுத்த பத்தியில் விவரிக்கப்பட்டுள்ள ஒன்றும் கைகளில் சக்தியைச் சேகரிப்பதற்கும் உணர்வதற்கும் ஒரு வழிமுறையாக, குறிப்பாக பயனுள்ளதாக இருக்கின்றன.) அதே நேரத்தில், முகுளத்தின் வழியாக உங்கள் உடலுக்குள் பாய்ந்து உங்களுடைய கரங்களுக்கும் உள்ளங்கைகளுக்கும் செல்லும் பேரண்டச் சக்தியின் மீது ஆழமாக ஒருமுகப் படுங்கள். உங்கள் கரங்களிலும் உள்ளங்கைகளிலும், அந்தக் குணப்படுத்தும் சக்தி திரளும் போது அங்கு இளஞ் சூட்டையும் சிலிர்ப்பையும் உணர்வீர்கள். இறுக்கமாக்க வேண்டாம்; உடலை எல்லா நேரங்களிலும் தளர்த்தி வைத்திருங்கள். இப்போது, உங்கள் கைகளை நெற்றியின் உயரம் வரை உங்கள் முன்னால் நீட்டி, ஓம் என்று உச்சரியுங்கள். ஓம் என்று இசைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம், படிப்படியாக உங்கள் கைகளை உங்கள் பக்க வாட்டில் வரும் வரை தாழ்த்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும் போது, குணமளிக்கும் அதிர்வலை கள் உங்கள் கைகளில் இருந்து குணமடைதல் தேவைப்படுவோருக்கு பாய்கின்றன என்று மனத்தளவில் உணருங்கள்.
-
பிரார்த்தனை: "தெய்வத் தந்தையே, நீ எங்கும் நிறைந்துள்ளாய்; நீ உன் எல்லாக் குழந்தைகளிலும் உள்ளாய்; உன் நலம்தரும் இருப்பை அவர்களுடைய மனங்களில் வெளிப்படுத்துவாயாக.” உங்கள் கைகளை ஒன்றைச்சுற்றி ஒன்றாக (முன்னோக்கிய இயக்கத்தில்) வேகமாக சுழற்றவும். உங்கள் கைகள் விரைவில் பேரண்டச் சக்தியால் நிரப்பப்படும். முகுளம் வழியாக நுழைந்து கைகளில் பாயும் பேரண்டச் சக்தியின் மீது ஒருமுகப்படுங்கள். பத்து முதல் இருபது விநாடிகள் கைகளைத் தொடர்ந்து சுழற்றுங்கள்.
இப்போது, உங்கள் கைகளை நெற்றியின் உயரம் வரை உங்கள் முன்னால் நீட்டி, ஓம் என்று உச்சரியுங்கள். மெதுவாக உங்களுடைய நீட்டிய கைகளை கீழே தாழ்த்துங்கள்; தாழ்த்தும் நேரம் முழுவதும் உங்கள் கைகளிலிருந்து குணப் படுத்தும் அதிர்வலைகள் நீங்கள் யாருக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறீர்களோ, அவர்களுக்குப் பாய்வதாக மனக்காட்சிக் காணுங்கள். - பிரார்த்தனை: "தெய்வத் தந்தையே, நீ எங்கும் நிறைந்துள்ளாய், நீ உன் எல்லாக் குழந்தைகளிலும் உள்ளாய். "நீ உன் நலம் தரும் இருப்பை அவர்களுடைய ஆன்மங்களில் வெளிப்படுத்துவாயாக" (மேலேயுள்ள முதற் பகுதியில் கூறியிருப்பது போல கைகளை ஒன்றாகத் தேய்த்து, ஓம் என்று உச்சரிக்கும் உத்தியை மீண்டும் செய்யவும்.)
- உயர்த்தப்பட்ட கைகளுடன், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் குணப்படுத்தும் அதிர்வலைகளை உலகம் முழுவதும் அனுப்பியவாறு மீண்டும் ஒருமுறை ஓம் என்று உச்சரியுங்கள்.
வீட்டில் ஒரு பிரார்த்தனை வழிபாடு நடத்துதல்
ஒரு கூட்டுப் பிரார்த்தனைக் குழுவில் சேர முடியாதவர்கள், மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி, வீட்டில் ஒரு தனிப்பட்ட அல்லது குடும்ப பிரார்த்தனை வழிபாட்டை நடத்தலாம். விரும்பினால், ஒருவரின் வழக்கமான காலை அல்லது மாலை தியானத்தின் ஒரு பகுதியாக இது ஆக்கப்படலாம். (முடிந்தால், வழக்கமாக இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ஓர் அறையில், அல்லது ஓர் அறையின் ஒரு பகுதியில் பிரார்த்தனை வழிபாடுகளை எப்போதும் நடத்துவது பயனளிப்பதாக இருக்கும், ஏனெனில் இது இறைவன் மீது ஒருவரின் ஒருமுகப்பாட்டையும் அன்பான கவனத்தையும் செலுத்துவதை எளிதாக்கும்.)
பல குடும்பங்கள், மற்றவர்களுக்காகவும் , உலக அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்ய — நண்பர்களையும் சமூகத்தின் மற்ற உறுப்பினர்களையும்கூட அழைத்தவாறு — ஒன்று கூடுவது வீட்டிலும் வெளியிலும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வுக்கு பெரிதும் பங்களிக் கிறது என்று கண்டுள்ளனர்.
பிறருக்காக பிரார்த்தனை செய்பவர்கள் அருளாசி பெற்றவர்கள், ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் மொத்த உயிரினத்தின் ஒற்றுமையைப் பற்றி அறிந்தவர்கள் ஆகிறார்கள். நாம் துன்பசக்திகளுக்கு எதிராக தனியாகப் போராடும் தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்கள் அல்ல. நமது மகிழ்ச்சி அனைவரின் மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது; அனைவரின் நலனிலும்தான் நமது மிக உயர்ந்த முழுநிறைவு அடங்கியுள்ளது. இந்த உண்மையை உணர்ந்து, உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் பங்கேற்பதில் உங்கள் நேரத்தையும் அனுதாபத்தையும் கொடுக்கும் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எங்களுடைய மனமார்ந்த பாராட்டை வழங்குகிறோம். மனித குலத்திற்குச் செய்யும் இத்தகைய தன்னலமற்ற சேவையின் மூலம், இறைவனின் நிலையான பாதுகாப்பையும் அனைத்தையும் திருப்திப்படுத்தும் அன்பையும் நீங்கள் எப்போதும் உணர்வீர்களாக.
— யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா
பிரார்த்தனைக்கான வேண்டுகோள்
பிரார்த்தனைக்கான வேண்டுகோள்கள் — தனக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ — எப்போதும்
வரவேற்கப்படுகின் றன மற்றும் பிரார்த்தனை சபையின் உறுப்பினர்களால் உடனடியான, அன்பான கவனம் கொடுக்கப்படுகின்றன. அவை ஆன்லைனில் அல்லது தொலைபேசி அல்லது கடிதம் மூலம் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-விற்கு தெரிவிக்கப்படலாம். தெரிவிக்கப்பட்ட பெயர்களை உடையவர்கள், மூன்று மாதங்களுக்கு சிறப்பு காலை மற்றும் மாலை குணப்படுத்தும் வழிபாடுகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் அதன் குணப்படுத்தும் சக்தியிலிருந்து பயனடைய பிரார்த்தனை வழிபாட்டில் இருக்கத் தேவையில்லை.
பிரார்த்தனை வேண்டுகோள்கள் மிக மிக இரகசியமாக வைக்கப்படுகின்றன. ஒருவர் பிரச்சனையை விவரிக்க விரும்பினால் தவிர, வேண்டுகோள்களில் அதன் விளக்கம் சேர்க்கப்பட வேண்டியதில்லை. பிரார்த்தனை சபை மற்றும் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவின் பணிக்குத் தேவையானதெல்லாம் குணமடைய விரும்பும் மனிதருடைய பெயர் மட்டுமே. ஒரு பிரச்சனையின் விவரங்கள் பிரார்த்தனை சபையில் உள்ள தனிமனிதர்களுக்கு தெரிந்தால், அத்தகைய விவரங்கள் விவாதிக்கப்படக்கூடாது. இல்லையெனில், எதிர்மறை மனத் தொடர்புகள் பிரார்த்தனையின் சக்தியைப் பலவீனப்படுத்தலாம். அதற்குப் பதிலாக, குழு உறுப்பினர்கள் இறைவனின் குணப்படுத்தும் சக்தி மீதும், யாதொரு இணக்கமற்ற நிலைமையையும் மாற்றுவதற்கான பரிபூரண நிலையின் மீதும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.