யோகானந்தர் தனது வாழ்க்கையின் பணியினை, 1917-ம் ஆண்டில், சிறுவர்களுக்கான “எப்படி-வாழ-வேண்டும்” பள்ளியை ஸ்தாபித்து தொடங்கினார். அங்கு நவீன கல்வி முறைகளுடன் யோகப் பயிற்சி மற்றும் ஆன்மீக இலட்சியங்கள் பற்றிய போதனைகள் இணைக்கப்பட்டன. காசிம்பஜார் மகாராஜா ராஞ்சியிலிருந்த தனது கோடைக்கால அரண்மனையை (கல்கத்தாவிலிருந்து சுமார் 250 மைல் தொலைவில்) பள்ளிக்கான இடமாக கிடைக்கச்செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு வருகைபுரிந்த மகாத்மா காந்தி அவர்கள் எழுதினார்: “இந்த நிறுவனம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.”
1920-ம் ஆண்டில் ஒரு நாள், ராஞ்சி பள்ளியில் தியானித்துக் கொண்டிருந்தபோது, யோகானந்தருக்கு, இப்போது மேலைநாடுகளில் தனது பணியைத் தொடங்குவதற்கான நேரம் இது என்பதைக் காண்பித்த தெய்வீகக் காட்சி கிடைக்கப்பெற்றது. அவர் உடனடியாக கல்கத்தாவுக்கு புறப்பட்டார். அங்கு, மறுநாள் அவர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாஸ்டனில் கூட்டப்படவிருந்த சர்வதேச சமயத் தலைவர்களின் மகாசபைக்கு இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்க அழைக்கப்பட்டார்: “உனக்கு எல்லாக் கதவுகளும் திறந்திருக்கின்றன. இப்பொழுது போனால்தான் உண்டு. இல்லாவிடில் எப்பொழுதும் இல்லை,” என்று கூறி அது சரியான சமயம் என்பதை ஸ்ரீ யுக்தேஸ்வரர் உறுதிப்படுத்தினார்.
அவர் புறப்படுவதற்கு சற்று முன்பு யோகானந்தரிடம், புராதன விஞ்ஞானமாகிய கிரியா யோகத்திற்கு இந்த யுகத்தில் புத்துயிரூட்டிய மரணமற்ற மகான் மகாவதார பாபாஜி வருகை புரிந்தார். “மேலைநாடுகளில் கிரியா யோக முறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று பாபாஜி யோகானந்தரிடம் கூறினார். “வெகு காலத்திற்கு முன் நான் உன் குரு யுக்தேஸ்வரை ஒரு கும்பமேளாவில் சந்தித்தேன்; அப்பொழுது நான் அவரிடம் பயிற்சி பெறுவதற்காக உன்னை அனுப்புவதாகக் கூறினேன். இறை-அனுபூதிக்கான விஞ்ஞான உத்தியான கிரியா யோகம் இறுதியில் எல்லா நாடுகளிலும் பரவும், மேலும் மனிதனின் தனிப்பட்ட, எல்லைகடந்த இறை ஞானத்தின் மூலமாக தேசங்களை இணைக்க உதவும்.”
இளம் ஸ்வாமி 1920, செப்டம்பரில் பாஸ்டனுக்கு வந்தார். சர்வதேச சமய மிதவாதிகளின் மகாசபையில் அவர் “சமய விஞ்ஞானம்” என்ற தலைப்பில் முதல் உரை ஆற்றினார். அது உற்சாகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் அவர் இந்தியாவின் புராதன விஞ்ஞானம் மற்றும் தத்துவமாகிய யோகம் மற்றும் அதன், காலத்தால் போற்றப்படும் தியான மரபையும் பற்றிய தனது போதனைகளை உலகளவில் பரப்புவதற்காக ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ஐ நிறுவினார். வாழ்நாள் சீடர்களாக ஆகப்போகும் டாக்டர் M.W. லூயிஸ், திருமதி. M.W. லூயிஸ், மற்றும் திருமதி ஆலிஸ் ஹேசி (சகோதரி யோகமாதா) ஆகியோரின் உதவியுடன் முதல் எஸ் ஆர் எஃப் தியான மையம் பாஸ்டனில் தொடங்கப்பட்டது.
அடுத்த பல ஆண்டுகளுக்கு, அவர் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் சொற்பொழிவாற்றிக் கற்பித்தார்; 1924–ல் அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் சொற்பொழிவாற்றும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். 1925-ம் ஆண்டின் முற்பகுதியில் லாஸ் ஏஞ்ஜலீஸ்-ஐ அடைந்து, அங்கு அவர், மவுண்ட் வாஷிங்டனின் உச்சிப் பகுதியில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பிற்காக, ஒரு சர்வதேச தலைமையகத்தை நிறுவினார், இது அவரது வளர்ந்துவரும் பணியின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாக மாறியது.