ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில், கிறிஸ்து-அன்பு மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகள் வழக்கத்தை விட வலுவாக விண்ணுலக மண்டலங்களிலிருந்து பூமிக்கு வெளிப்படுகின்றன. இயேசு அவதரித்த போது பூமியில் பிரகாசித்த எல்லையற்ற ஒளியால் வானவெளி நிரப்பப்படுகிறது. பக்தி மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் ஒத்திசைந்து இருப்பவர்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ளர்ந்திருந்த எங்கும் நிறைந்த உணர்வுநிலையின் மாற்றும் அதிர்வுகளை வியக்கத்தக்க உணர்வுபூர்வ வழியில் உணர்கிறார்கள்.
கிறிஸ்து உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, முழுநாள் கிறிஸ்துமஸ் தியானம் என்ற எண்ணம் உண்மையில் அவரால் எனக்குக் கொடுக்கப்பட்டது. அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார், ஆனால் நீங்கள் ஏற்கும் திறனற்று இருப்பதால் அவரது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் உங்களிடம் வர விழைகிறார், ஆனால் உங்கள் வாழ்க்கையில் அவர் பிரவேசிக்கக் கூடிய ஒரே வாயிலான பக்தியின் நுழைவாயில்கள் மூடப்பட்டிருப்பதால், அவரால் நுழைய முடியவில்லை. நேர்மையான ஆன்மாக்களை எங்கு காணினும், அவர் அவர்களிடம் வர முயற்சிக்கிறார்; ஆனால் அமைதியின் கதவுகள் மூடப்பட்டு, அமைதியின்மை எனும் தாழ்ப்பாள் ஆன்மாவைப் பூட்டியிருக்கும்போது அவர் எப்படி உள்ளே நுழைய முடியும்? இருப்பினும் நீங்கள் நீண்ட நேரம் ஆழ்ந்து தியானித்து, உங்கள் ஆன்மாவின் முழு அன்போடு கிறிஸ்துவை அழைத்து, அமைதியின்மை மற்றும் சந்தேகத்தின் அனைத்து தடைகளையும் அகற்றினால், அவர் மனமுவந்து உள்ளே நுழைவதை நீங்கள் காண்பீர்கள். கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
இயேசுவின் உலகளாவிய அன்பு, மன்னிப்பு, பண்பு, தியாகம், பக்தி ஆகியவற்றை உங்களுக்குள் உணர்வதன் மூலமும், அனைத்து சகோதர இனங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் கிறிஸ்துவின் அன்பை உணர்வதன் மூலமும் இயேசுவின் பிறப்பை உண்மையாகக் கொண்டாடுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் தியான உணர்வுநிலையில் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை உங்கள் சமூக கொண்டாட்டங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்துமஸ் விழாக்களில் கிறிஸ்துவைப் பற்றிய ஒரு கருத்து மட்டுமே உள்ளது; ஆனால் தியானத்தில், தெய்வீக பரவசத் தொட்டிலில் அவர் ஒரு சாசுவத, என்றும் ஆனந்தமய மெய்ப்பொருளாக அறியப்படுகிறார் மற்றும் உணரப்படுகிறார்.
இந்த பருவகாலத்தின் ஆழந்த முக்கியத்துவத்தை உணர உதவும், எல்லையற்ற கிறிஸ்துவைப் பற்றிய வழிநடத்தப்பட்டட தியானம் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் மேலும் பல படைப்புகளுக்கு எங்கள் “பருவகால அகத்தூண்டுதல்” பக்கத்தைப் தயவுசெய்து பார்வையிடவும்.