அகந்தை. அகந்தை-தத்துவமான அகங்காரம் (நேர்ப்பொருள்: “நான் செய்கிறேன்), இருமை அல்லது மனிதனுக்கும் அவனைப் படைத்தவனுக்கும் இடையே தோற்றமளிக்கின்ற பிரிவுக்கான மூலகாரணம். அகங்காரம் மனிதர்களை மாயையின் பிடியில் ஆழ்த்துகிறது. அதனால் அகநிலைப் பொருள் (அகந்தை) புறப்பொருளாக பொய்யாகத் தோற்றமளிக்கிறது; படைக்கப்பட்ட உயிரினங்கள் தம்மையே படைப்பவர்களாகக் கற்பனை செய்து கொள்கின்றன. அகந்தை-உணர்வுநிலையை அகற்றுவதால், மனிதன் தனது இறை அடையாளத்திற்கு, அதாவது, ஒரே பேருயிரான இறைவனுடன் தனது ஒன்றியதன்மைக்கு விழித்தெழுகிறான்.
ஐம்பூதங்கள். பிரபஞ்ச அதிர்வு அல்லது ஓம்,ஐந்து தத்துவங்களாகிய (மூலப்பொருட்கள்) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வெளிப்பாட்டின் மூலம், மனிதனுடைய பூதவுடல் உட்பட அனைத்து ஸ்தூலப் படைப்பையும் கட்டமைக்கின்றது. இவை அறிவாற்றலும் அதிர்வலைத் தன்மையும் கொண்ட கட்டமைப்பைச் சார்ந்த சக்திகளாகும். நில மூலப்பொருள் இன்றி, பொருட்களின் திடநிலை இருக்காது; நீர் மூலப்பொருள் இன்றி, திரவ நிலை இருக்காது; காற்று மூலப்பொருள் இன்றி, வாயுநிலை இருக்காது; நெருப்பு மூலப்பொருள் இன்றி, வெப்பம் இருக்காது; ஆகாய மூலப்பொருள் இன்றி, பிரபஞ்சத் திரைப்படக் காட்சியை உண்டாக்குவதற்கான பின்னணி இருக்காது. தேகத்தில், பிராணன் (பிரபஞ்ச அதிர்வலை சக்தி) முகுளத்தின் வழியாக நுழைகின்றது. அதன் பின்பு கீழுள்ள ஐந்து சக்கரங்களின் செயல்பாட்டினால் ஐந்து மூலசக்தி ஓட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. ஐந்து சக்கரங்கள் அல்லது மையங்களாவன: மூலாதாரம் (நிலம்), ஸ்வாதிஷ்டானம். (நீர்), மணிபூரகம் (நெருப்பு), அனாகதம் (காற்று), மற்றும் விசுத்தம் (ஆகாயம்). இந்த மூலப்பொருட் களுக்கான சமஸ்கிருத சொற்கள் ப்ருத்வி, அப்பு, தேயு, பிராணா மற்றும்ஆகாஷ் ஆகும்.
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள். ஒரு மீன் நீரால் சூழப்பட்டுள்ளது போன்று, மனிதன் பிரபஞ்ச சக்தியால் குழப்பட்டுள்ளான். பரமஹம்ஸ யோகானந்தரால் உருவாக்கப்பட்டு, யோகதா சத்சங்கப் பாடங்களில் கற்பிக்கப்படும் சக்தியூட்டும் உடற் பயிற்சிகள், மனிதனை, தன் தேகத்தைப் பிரபஞ்ச சக்தி அல்லது அண்ட சராசரப் பிராணனால் மீண்டும் சக்தியூட்டிக் கொள்வதற்கு வல்லவனாக்குகின்றன.
ஆகாயம். “ஆகாயம்” மற்றும் “பரவெளி” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள சமஸ்கிருத “ஆகாஷ்,” சடப்பொருள் உலகில் மிகவும் நுட்பமான அதிர்வலை மூலப்பொருள் என்பதைக் குறிப்பிட்டுக் குறிக்கிறது. பார்க்க ஐம்பூதங்கள். ) அது ஆ, “நோக்கி” மற்றும் காஷ், “கண்ணுக்குப் புலப்படுவது, தோன்றுவது” என்பதிலிருந்து பெறப் படுகிறது. ஆகாயம், சடப்பொருள் உலகில் உள்ள அனைத்தும் காணப்படுவதற்கான ஒரு நுட்பமான பின்னணியாகும். பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார், “பரவெளி பொருட்களுக்கு கனபரிமாணங்களைத் தருகிறது; ஆகாயம் வடிவங்களைப் பிரிக்கின்றது.” அவர் விளக்கினார், “ஆகாயம்-ஊடுருவிய பரவெளியானது விண்ணுலகம் அல்லது சூட்சும உலகம் மற்றும் மண்ணுலகத்திற்கு இடையேயான எல்லைக்கோடு.” இறைவன் உருவாக்கிய அனைத்து நுட்பமான சக்திகளும் ஒளி அல்லது எண்ண-வடிவங்களால் ஆக்கப்பட்டவை மற்றும் ஆகாயமாக வெளிப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அதிர்வலைக்குப் பின் வெறுமனே மறைந்திருக்கின்றன.
தீமை. மனிதனிலும் இயற்கையிலும் இணக்கமற்றவைகளாக வெளித்தோன்றி, படைப்பில் இறைவனின் எங்குமுள்ள தன்மையை மறைக்கும் சாத்தானின் சக்தி, அத்துடன் தெய்வீக விதிமுறைக்கு, (பார்க்க தர்மம் எதிராக, இறைவனுடனான தனது அடிப்படை ஒருமையைப் பற்றிய உணர்வுநிலையை மனிதன் இழக்கும்படி செய்து, அத்துடன் இறை-அனுபூதி பெறுவதையும் தடைசெய்கின்ற எதையும் விளக்குவதற்கான ஒரு பரந்த சொல்.
குணங்கள். இயற்கையின் குணங்களாகிய தாமஸம், ராஜஸம் மற்றும் ஸத்துவம் — தடங்கல், செயல் மற்றும் விரிவு; அல்லது பொருண்மை, சக்தி மற்றும் அறிவாற்றல். மனிதனில் இந்த மூன்று குணங்களும் தம்மை அஞ்ஞானம் அல்லது சோம்பல்; செயற்பாடு அல்லது போராட்டம்; மற்றும் ஞானம் ஆகியனவாக வெளிப்படுத்திக் கொள்கின்றன.
குரு. ஆன்மீக ஆசான். குரு என்னும் வார்த்தை, வெறுமனே எந்த ஆசிரியரையோ அல்லது விரிவுரையாளரையோ குறிப்பிடுவதற்காக பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்பட்டாலும், ஓர் உண்மையான இறையொளி பெற்ற குரு, தன்னையே வென்ற அவரது சாதனையில் பரம்பொருளின் சர்வ வியாபகத்துடன் தன் அடையாளத்தை உணர்ந்துவிட்டவர் ஆவார். இப்படிப்பட்ட ஒருவரே சாதகரை, அவருடைய அல்லது அவளுடைய இறை ஞானத்தை நோக்கிய அகப் பயணத்தில் வழிநடத்த ஒப்பற்ற தகுதி படைத்தவராவார்.
ஒரு பக்தன் மெய்யார்வத்துடன் கடவுளைத் தேடத் தயாராக உள்ளபோது, இறைவன் ஒரு குருவை அவனிடம் அனுப்புகிறான். இப்படிப்பட்ட ஓர் ஆச்சாரியரின் விவேகம், மதிநுட்பம், ஆத்ம-அனுபூதி மற்றும் உபதேசங்கள் மூலமாக இறைவன் சீடனுக்கு வழிகாட்டுகிறான். குருவினுடைய உபதேசங்களையும், ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் பின்பற்றுவதன் மூலம், சீடன் இறைவனைக் கண்டறிதல் என்னும் அமிர்தத்திற்கான தனது ஆன்மாவின் ஆசையை பூர்த்தி செய்ய வல்லவனாகிறான். தமது ஆன்மாவின் ஆழமான ஏக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில், உண்மையான சாதகர்களுக்கு உதவுவதற்காகக் கட்டளை இடப்பட்ட ஓர் உண்மையான குரு, சாதாரணமான ஆசிரியரல்ல; அவர் ஒரு மனித வாகனம்; அவருடைய மனம், வாக்கு, காயம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை இறைவன், இழந்துவிட்ட ஆன்மாக்களை அவர்களது அமரத்துவ இல்லத்திற்கு திரும்பவும் ஈர்ப்பதற்கான ஒரு வாய்க்காலாக பயன்படுத்துகிறான். ஒரு குரு சாத்திர உண்மையின் வாழும் உருவமாகத் திகழ்கிறார், அவர், சடப்பொருளின் பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு பக்தனின் கோரிக்கைக்கு மறுமொழியாக, இறைவனால் நியமிக்கப்பட்டுள்ள முக்திக்கான முகவராவார்.“ஒரு குருவின் சகவாசத்தில் இருப்பது,” சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் தி ஹோலி சயின்ஸ்-ல் எழுதியுள்ளார், “அவரது தேகரீதியான இருப்பில் இருப்பதுடன் மட்டுமல்லாமல், (இது சில சமயங்களில் சாத்தியமில்லையாதலால்), முக்கியமாக அவரை நம் இதயங்களில் இருத்தி, கொள்கையிலும் அவருடன் ஒன்றாகி இருந்து, அவருடன் நம்மை இசைவித்துக் கொள்வது என்று பொருள்படும்.”
குருதேவர். ““தெய்வீக ஆசான்,” ஒருவருடைய ஆன்மீக ஆசானைக் கண்டு பேசும்பொழுதும் குறிப்பிடும்பொழுதும் பயன்படுத்தப்படுகின்ற மரியாதையைக் குறிக்கும் வழக்கமான சமஸ்கிருத பதம்; சில சமயங்களில் ஆங்கிலத்தில் “மாஸ்டர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குருமார்கள், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். குருமார்கள், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்)-வின் குருமார்கள் பகவான் கிருஷ்ணன், இயேசு கிறிஸ்து, மற்றும் சமகாலத்திய மிக உயர்ந்த மகான்களின் மரபில் வந்த மகாவதார பாபாஜி, ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர், சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி மற்றும் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் ஆகியோர் ஆவர். பகவான் கிருஷ்ணனுடைய யோக விதிகளுக்கும் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கும் இடையே உள்ள இணக்கத்தையும், அடிப்படை ஒருமையையும், எடுத்துக்காட்டுவது ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் வழங்கும் போதனையின் முக்கியமான பாகமாகும். யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் இறைப் பணியான முழு மனித இனத்திற்கும் இறை-அனுபூதிக்கான ஒரு நடைமுறை ஆன்மீக விஞ்ஞானத்தை அளிப்பதை நிறைவேற்றுவதற்கு இந்த அனைத்து குருமார்களும் தங்களுடைய உன்னத போதனைகள் வாயிலாகவும் தெய்வீக நிமித்த காரணத்தின் வாயிலாகவும் தமது பங்காற்றுகிறார்கள்.ஒரு குருவிற்கு உரிய மரபுவழியை தொடர்ந்து நடத்திச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சீடருக்கு, அந்தக் குருவினுடைய ஆன்மீகப் பொறுப்பை வழங்குவது குருபரம்பரை என்று கூறப்படுகிறது. இவ்வாறாக பரமஹம்ஸ யோகானந்தரின் நேரடி குருமார்கள் மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயர் மற்றும் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆவர்.
பரமஹம்ஸ யோகானந்தர், தான் மறைவதற்கு முன்பு, ஒய் எஸ் எஸ் குருமார்களின் மரபுவழியில் அவரே கடைசியாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று கூறினார். அவரது சொஸைடியில் அடுத்து வரும் எந்த ஒரு சீடரோ அல்லது தலைவரோ ஒருபோதும் குரு எனும் பட்டத்தை ஏற்க மாட்டார்கள். அவர் கூறினார், “நான் மறைந்துவிட்ட பிறகு போதனைகளே குருவாக இருக்கும். . . . போதனைகள் மூலம் நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய குருமார்களுடனும் இசைந்திருப்பீர்கள்.”
ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப்–ன் அடுத்தடுத்த தலைமையை குறித்து கேள்வி எழுப்பியபோது, பதிலளித்தார், “இந்த அமைப்பின் தலைவர்களாக எப்போதும் ஆன்ம-அனுபூதி பெற்ற ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அவர்களை ஏற்கனவே இறைவனும் குருமார்களும் அறிந்துள்ளனர். அவர்கள் அனைத்து ஆன்மீக மற்றும் நிறுவன விஷயங்களில் எனது ஆன்மீக வாரிசாகவும் பிரதிநிதியாகவும் பணியாற்றுவார்கள்.”
ஞான யோகம். அறிவாற்றலின் பகுத்தறியும் சக்தியை, ஆன்மாவின் எல்லாமறிந்த ஞானமாக முற்றிலும் மாற்றுவதன் வாயிலாக இறைவனுடன் ஒன்றிணையும் மார்க்கம்.